குடும்பம்

நான்

 

 

 

 

 

 

 

ஒரு வெற்றிடம்..

உறவுகள் வரும் வரை..

******************

அம்மா

அன்பும், அரவணைப்பும்
அனுதினமும் அளிப்பதில்
அன்னையின் இதயம்
ஆபத்தே இல்லாத
ஆயிரம் மெகா வாட்
அணு மின் நிலையம்.

******************

அப்பா

தங்கம் போல்
பொருள் ஈட்ட
உலைக்குள்ளே
தான் புகுந்து
தனலினையும்,
கசிவினையும்
தனக்குள்ளே
அடங்கிப்போக
தினம் தினம் தான்
தனம் கொணர்வான்
தலையாய
தகப்பனவன்.

******************

குழந்தை

அனலாய் அடித்தாலும்,
குருதியே குளிர்ந்தாலும்,
வெளியில் வேதனையோ,
வேலையின் இன்னல்களோ
பட்டெனப்பறந்து போகும்
வீட்டினில் நுழைந்ததுவும்
தாமரை போல் உன் சிரிப்பு

******************

தாய் மாமன்

தமக்கைக்கு ஓர் குடும்பம்
அவளுக்கு ஓர் குழந்தை
தனதென்ப துறந்திட்டு
தளிரதனை காத்திடுவான்.

உறவு பல வரும் போகும்
உன் உறவு போகாதே;
உரிமையாய் பழகிடவும்,
உருமலில் பயந்திடவும்,
பெரியவர்களும் அறியாத,
பலவதுவும் பகிர்ந்துள்ளேன்.

அது ஏனோ உனைக்கண்டால்
உரைத்திடவே முடியாதே
உன் பால் நான் கொண்ட
உயர்ந்தவொரு நட்பொன்று.

மரியாதை மறுத்தாலும்,
மறுவார்த்தை மொழிந்தாலும்
மனம் நோகச் செய்தாலும்
மன்னிப்பான், தாய் மாமன்.

******************

பாட்டீ

தளராத வயதினிலும்
தனக்காக வாழாமல்
எனக்காக சேர்த்திடுவாள்,
உலகாய அன்பதனை.

அன்னைக்கும் தெரியாமல்,
களவாடியும் கொடித்திடுவாள்
வம்பனைத்தும் வென்றிடுவாள்,
அன்பான கள்ளியவள்.

இளவயது இரத்தமென
இறுமாப்பில் இருந்தாலும்
இளகாமல் போனேனே,
எனை நானே நொந்தேனே.

இளைப்பாற மடியினையும்,
இன்மொழிகள் இதயமாதும்
அன்பொன்றே அருமருந்தாய்
அன்றாடம் தான் கொடுத்தாள் –

இறுதிவரை என் அன்பால்
ஈடு கட்ட மறந்திட்டேன்.

இது படிக்கும் அனைவரையும்
வேண்டுவது ஒன்றினையே
உள்ளத்தே ஒளிக்காமல்
உறக்கவே உரைத்திடுங்கள்
உளமார்ந்த உமதன்பு
உன் பொறுப்பு, உன் பாட்டீ.

******************

உடன் பிறப்பு

தம்பியென்றும் தமக்கையென்றும்
அன்பு செய்ய பஞ்சமில்லா
வழிதோறும் உடன் நடக்கும்
வாழ்க்கையின் அங்கம் அவர்.

எங்கேது நடந்தாலும்
இதயங்கள் ஆற்றாது
ஊரறிய உரைக்காமல்
உள்ளுக்குள் உறைந்திடுவர்.

கதகதக்கும் கட்டங்கள்
சிறகடிக்கும் சிந்தைகள்
சிநேகமாய் ஒரு நொடியும்
கோபமாய் மரு நொடியும்
பாசங்கள் பகிர்ந்திடவே
பாதாளம் வரை போகும்
உறவுகளில் மிக உயர்வு
உயிர் பகிர்ந்த உடன் பிறப்பே.

******************

நண்பன்

உருவத்தால் ஒட்டாமல்
உள்ளத்தால் ஒன்றியவன்
இளவயதில் இணைந்தவன்
இனியவை பகிர்ந்தவன்.

தற்குறி போல் விளையாட்டில்
உயிர்காக்கும் தோழனவன்
உறவோடு உறவாக
உன்னதமாய் உபரியாய்
இறுதிவரை இளமை காட்டும்
தளராத இதயமவன்.

******************

மனைவி

யவ்வனம் எனும் போதை
எள்ளளவும் கொள்ளாத –
தன்மீது எனைச்சுமந்த
அன்பிற்கு அடையாளம்
அவள் மடியில் வந்தெழுந்த
அழகான எம் குழந்தை.

பருவங்கள் மாறியதும்,
கருவங்கள் தாழ்ந்திடவும்,
துருவங்கள் போலிருந்த
சொந்தங்கள் சேர்ந்ததுவே.

உற்றதுவோ – பெற்றதுவோ,
போற்றலோ – தூற்றலோ,
வியத்தலோ – வசைத்தலோ,
செய்விப்பது அவள்,
செயலாக்கம் என் வழியே.

வரமோ - வாதமோ,
அவள் அமைந்தது,
ஐய்யமே இல்லாமல்
ஐய்யன் அவன் செயல்.
உடலை இயக்குகின்றாள் 
உணவுகள் வழியே  
இதயத்தை இசைக்கின்றாள்
உணர்வுகள் வழியே.

உயிரோடு உயிராகி
சுவாசத்தை ஏந்தி என்
காதலால் சேர்ந்தவள்
என் மெய்யென மாறிட்டாள்.
என் வாழ்வின் அனைத்தினிலும்
பரிமளிக்கும், பிரதிபலிக்கும்
அவள் அன்பு பறை சாற்ற
ஒருபோதும் வெட்கிலேனே.

******************

சுற்றம்

செம்பென்று மிளிர்ந்தவனை,
சொம்பாக்கி வைத்தாளே
ஏளனம் செய்பவரே,
ஏதுவாக சொல்வேன் கேளும்.
'சரி' என்ப சண்டியராய்
சண்டைக்கு நிற்பதொன்றும்
சரி வராது உறவுகளில் -
ஒருபோதும், உரைக்கக்கேள்.
மனம் போல மாங்கல்யம்
விதித்தவைகள் மிதிக்காதே
மதித்துக்கேள், மதி வெல்லும்
அமைதியில் காண் பேரின்பம்.

******************

12 Comments

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *