முந்திரிக்கொட்டை

வயதுக்கு ஒவ்வா முதிர்ச்சியை கண்டாய்
எண்ணில் அடங்கா நண்பர்கள் கொண்டாய்

சுற்றமும் நட்பும் புடை சூழ நின்றாய்
அய்யகோ
உயிரினை துறந்து எம்மையும் கொன்றாய்

அடங்கி இருந்தோம் என்போல் பலரும்
வயதினிலே மூப்பு கொண்டதினாலா ?

உன் அன்பினில் மிளிரும் ஆளுமை எங்கள்
அதி காரம் அடங்கி போனதினாலா ?

காலத்தை வென்றதாய் கேட்டோம் முன்பு
காலனை வென்றவன் நீயென்று கண்டோம்

எம் குலம் தழைக்க நீ பயிர் காத்தாய்
எம்மையே வதைத்து உன்னுயிர் பிரித்தாய்

காலமும் உனக்கு கடன் பட்டிருப்பேன்
சற்று இருந்திருந்தால் அடைத்திருப்பேனோ ?

கேட்கலாம் எவரும் அன்பினில் ஏது கடன்?
வாழ்ந்திலர் அவரும் சில நாள் உன்னுடன்

நட்பினைத தாண்டி உன்னுடன் ஓர் உறவு
உறவுகள் தாண்டி நம்மிடை ஓர் பரிவு

எப்படி காத்தாய் இப்படி ஒரு சாந்தம்
காந்தியம் மீறிய நட்பின் காந்தம்

ஏனைய மக்கள் உறங்கிடும் நேரம்
எழுவாய் வருவாய் வலம் தினம்தோறும்

சகலரும் அணுகிட அன்பினில் சிறந்தாய்
எவர்க்கும் ஒன்றெனில் சிட்டாய் விரைந்தாய்

உனக்கொரு நிகர் எனில் வேறெவர், நீயே!
எமக்கொரு வலியெனில் உடனிருப்பாயே !

வய தொத்தவனாயினும் மூப்பினில் முதல் நீ
காலத்தை முன் உணர்ந்து
ஞாலத்தை முன் துறந்து
காயத்தை பின் கொணர்ந்து
முன் சென்றதால்
நண்பா
நீயே, எங்களில்

முந்திரிக்கொட்டை |

Author: goprabhakaran

9 thoughts on “முந்திரிக்கொட்டை

  1. வார்த்தைகளுக்குள் அடக்கி விட இயலாத இழப்பு. அடிக்கடி சந்தித்து பேசி பார்க்க இயலா விட்டாலும் ….நண்பர்கள் எங்கோ ஒருபுறம் நலமாக உள்ளோம் என்பது மிகப்பெரும் பலமாக இருந்தது.
    நீர்க்குமிழி வாழ்க்கை.

  2. எந்த விதத்திலும் யாராலும் நியாயப்படுத்தி ஆறுதல் சொல்லி முடிக்க இயலாத இழப்பு…

    இன்னமும் மனம் ஏற்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *